விருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 பிப்ரவரி, 2015

காமாட்சி அம்மன் விருத்தம்

காப்பு

மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே - திங்கட்
புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.

நூல்

சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியா நின்ற வுமையே.
சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்.
சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்
ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
சிறியனால் முடிந்திராது
சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடனுன்னதம்மா.
சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன்மணியு நீ.
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்,
பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
- பாதச் சிலம்பி னொலியும்,
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும் ;
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும் ,
சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையில் பொன்கங்கணம்,
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்,
அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனாற் சொல்லத் திறமோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்,
கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ
குழப்பமா யிருப்ப தேனோ
விதியீது,நைந்துநான் அறியாம லுந்தனைச்
சதமாக நம்பி னேனே
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக முனக் கிலையோ
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே.
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள்வாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்
பேரான ஸ்தலமு மறியேன்
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
போற்றிக் கொண்டாடி யறியேன்,
வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி,
வாயினாற் பாடியறியேன்,
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கியொரு நாளுமறியேன்,
சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்
சரணங்கள் செய்து மறியேன்,
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு,
சாஷ்டாங்க தெண்ட னறியேன்,
ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்
ஆச்சி நீ கண்ட துண்டோ,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பெற்றதா என்றுன்னை மெத்தவும் நம்பிநான்
பிரியமாயிருந்த னம்மா,
மெத்தனம் உடையை என்றறியாது நானுன்
புருஷனை மறந்தனம்மா,
பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்
பராமுகம் பார்த்திருந்தால்,
பாலன் யானெப்படி விசனமில்லாமலே
பாங்குட னிருப்பதம்மா,
இத்தனை மோசங்களாகாது ஆகாது
இது தர்மமல்ல வம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ
யிதுநீதி யல்லவம்மா,
அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தையோ
அதை யெனக்கருள் புரிகுவாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணி மந்தர காரிநீயே
மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ
மலையரையன் மகளானநீ,
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ,
தயாநிதி விசாலாட்சி நீ
தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ
சரவணனை யீன்ற வளும் நீ,
பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்
பேர்பெற வளர்த்தவளும் நீ,
பிரவணசொரூபி நீ, பிரசன்னவல்லி நீ
பிரிய வுண்ணாமுலையு நீ
ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ,
பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ,
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்,
கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்
காதினுள் நுழைந்த தில்லையோ
இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா
இனி விடுவதில்லை சும்மா,
இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்
இதுதரும மல்ல வம்மா,
எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்
ஏதும் நீதியல்ல வம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்
மூடனான் செய்த னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு
மோசங்கள் பண்ணி னேனோ
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா
ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா
சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே
சிறுநாணமாகு தம்மா,
சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக உன்
அடியன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

எந்தனைப் போலவே செனன மேடுத்தோர்க
ளின்பமாய் வாழ்ந் திருக்க,
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
உன்னடியேன் தவிப்பதம்மா,
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பின்னை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை
போக்கடித் தென்னை ரட்சி
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா
அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பாரதனி லுள்ளளவும் பாக்கிபத்தோ டென்னைப்
பாங்குடனி ரட்சிக்கவும்,
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்
சீர்பெற்ற தேசத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய ளணு காமலும்,
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்,
பேர்பெற்ற காலனைப் பின்றொடர வொட்டாமற்
பிரியமாய்ச் காத்திடம்மா.
பிரியமாயுன் மீதில் சிறியனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி.
ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்
னம்மை யேகாம்பரி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா,
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனிஜெனன மெடுத்திடாமல்,
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பினேனே,
முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக்காதே யம்மா,
வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனாரேசப் போறார்,
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத் தீருமம்மா,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

தரவிறக்க : காமாட்சி அம்மன் விருத்தம்

புதன், 25 பிப்ரவரி, 2015

நடராஜப் பத்து

மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நா‎ன்கி‎ன் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவ‎ன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இ‏ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒ‎ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே எ‎ன் குறைகள் யார்க்கு உரைப்பே‎‎ன்,
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு ‏ இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இ‏துவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.

கடலெ‎ன்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற ‏ இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற‏ இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அ‎ன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
எ‎ன்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.

நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமு‎ன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுக‎ன் அறு முகன் இருபிள்ளை ‏ இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னி‏டமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை ‏ இதுவல்லவோ ‏
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை ‏
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
மொழி எதுகை மோனையும் ‏ இல்லாமல் பாடினும் மூர்க்கனேன் முகடாகினும்
மோசமே செய்யினும் தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும்
பழியெனக் கல்லவே தாய்தந்தைக் கல்லவோ பார்த்தவர்கள் சொல்லார்களோ
பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ பாலகனை காக்கொணாதோ
எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வி‎னை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழு‎வனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமெ‎ன்று உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உ‎ன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ ‏
இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் ‏ இல்லை யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

தாயார் ‏ இருந்தென்ன தந்தையும் ‏ இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் ‏ இருந்தென்ன குருவாய் ‏ இருந்தென்ன சீடர்கள் ‏ இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க
உதவுமோ ‏ இதுவெல்லாம் தந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

‏இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ ‏
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ ‏ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ ‏ இதுவென்ன சாபமோ, இதுவே உன் செய்கைதானோ
‏இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓஹோ ‏ இது உன்குற்றம் என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ‏ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் ‏ இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் ‏ இவரை,
சற்றெனக்குள்ளாக்கி ராசி பனிரெண்டையும் சமமாய் நிறுத்தி யுடனே
பணியொத்த நட்சத்திரங்களிருபத்தேழும் பக்குவப்படுத்திப் பின்னால்,
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டிப் பலரையும் அதட்டி என்முன்
கனிபோலவே பேசி கெடுநினைவு நினைக்கின்ற சேடர்களையுங் கசக்கி,
கர்த்தநின் தொண்டராம் தொண்டர்க்கு தொண்டரின் தொண்டர்கள் தொழும்பனாக்கி
சிறுமணவை முனுசாமி பாடியவை இசைக்கும் எமை அருள்வது இனியுன் கடன் காண்
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

- சிறுமணவூர் முனுசாமி

குறிப்பு :
இறுதிப்பாடலின் இறுதி அடிக்கு முந்தைய அடி, இசையில் வேறு மாதிரி பாடப்பட்டிருக்கும். எது சரியானது என்பது உறுதிபட தெரியவில்லை...

இறுதிப் பாடல் பின்நாட்களில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்ற ஐயத்தின் காரணமாக இரண்டையும் அப்படியே பதிவிட்டுள்ளேன்...

தரவிறக்க: நடராஜப் பத்து

வியாழன், 12 பிப்ரவரி, 2015

சுப்ரமணிய விருத்தம்

சுப்ரமணிய சப்தகம் என்ற பெயரில் இணையத்தில் பார்த்தேன். ஆனால் நான் படித்த விருத்தப்பாக்களை போல் இருப்பதால் நமது பதிவில் "சுப்ரமணிய விருத்தம்" என்றே பதிவிட்டுள்ளேன். எழுதியவர் பெயர் தெரியவில்லை.

கந்தனே! கடம்பனே! கருத்தினில் உறைந்திடும் கருணை வடிவான குகனே!
கண்களோ பன்னிரண்டிருந்திடுனும் ஏழையைக் காக்க ஒரு கண்ணுமிலையோ!
சிந்தனை முழுவதும் சிதறிடா வண்ணமுன் செம்மலர்ப் பாதங்களே!
சரண் என்று கொண்டுனைச் சந்ததம் பாவினேன் செவிகளில் விழவில்லையோ!
வந்தனை செய்துனை வாழ்த்தியே நாளெல்லாம் வணங்கிடும் சிறுவன் என்னை
வாழவே வைப்பதும் வேலனே! உனக்கு ஒரு விளையாட்டுச் செய்கை யன்றோ!
வந்தெனை இக்கணம் வலியவந்தே அருள வேண்டியே பணிந்து நின்றேன்
வளமான திருத்தணியில் வந்து நிதம் வாழ்கின்ற வேலனே! சக்தி மகனே!

எத்தனை விதங்களில் என் அப்பனே! உன்னையான் எப்படிப் பாடினாலும்
எத்தனை இடங்களில் என் ஐயனே! உன்னையான் எப்படி நோக்கினாலும்!
எத்தனைபேர் சொல்லி என் குறைகள் யாவுமே எடுத்து நான் கதறினாலும்
ஏலாமல் இன்னுமேன் என்னையே சோதித்து எள்ளி நகையாடுகின்றாய்!
உத்தமன் உன்னையே ஓர் துணை என்றுநான் உறுதியாய் பற்றி நின்றேன்
உடனே உன்மயில் மீது ஓடோடி வந்தெனது உறுவினைகள் யாவும் களைவாய்!
பித்தனின் மைந்தனே! பக்தியாற் பிதற்றுமிப் பித்தனையும் ஆண்டருள்வாய்!
பெருமைபொலி செந்தூரில் புகழ்சேர ஒளிர்கின்ற பாலனே சக்தி மகனே!

கதியாக உன்பதங் கருத்தினில் கொண்டு நான் கதறியே அழுகின்றதும்
கொடுமையாம் வறுமையிற் குமைந்து நான் உன்னருளைக் கூவியே தொழுகின்றதும்!
பதியான உன்செவிகள் பன்னிரெண்டிலொன்றிலுமே பதியாமல் இருப்பதேனோ
படுதுயரம் இனிமேலும் படமுடியாதப்பனே பார்த்தருள் புரிகுவாயே!
விதியான தென்னை மிக வாட்டியே வதைத்திடவும் வேறொன்றும் செய்வதறியேன்
விழிகளில் நீர் பெருக வீழ்ந்து நான் கதறுவதை வேடிக்கை பார்ப்பதழகோ
துதிபாடி உன்னையே தொழுகின்ற என் துயர் துடைப்பதுன் கடமையன்றோ?
தூய்மைசேர் பழநிதனில் தனியாகத் தவங்கொண்ட தூயனே! சக்திமகனே!

மாயவன் மருகனே! மாகாளி மைந்தனே! மனத்தினில் என்றும் வதியும்
மாய சொரூபிணியும் மலையரசன் மகளுமாம் மாசக்தி வேல் கொண்டவா!
தூயவன் உன்னையான் தினமுமே பாடியும் திருவுளம் இரங்க விலையோ!
துதிப்பதில் பிழையேது மிருப்பினும் தயவாகப் பொருத்தருள் தள்ளிடாதே!
நீயெனத் தள்ளிடினும் நானுனது பாதமே நம்பினேன் நாளும் ஐயா!
நெஞ்சமும் உருகியே நீராக விழிகளில் நாளெல்லாம் ஓடநானும்!
ஐயனேஉன்னடிகள் அடைக்கலமென்றடைந்திட்டேன் ஆண்டருள் செய்குவாயே!
அழகான ஏரகத்தமருமொரு குருவே! என் அன்னையாம் சக்தி மகனே!

பாரதனில் பிறந்திட்டுப் பலகஷ்டம் தான் பட்டுப் பாவியேன் மிகவும் நொந்தேன்
பார்த்தருள் புரிகுவாய்! பார்வதியின் மைந்தனே பாலனே! கருணை செய்வாய்!
பேரெதும் வேண்டிலேன்! புகழ் வேண்டேன் உன் பாதப் புகலொன்றே போதுமப்பா!
பேதை நான் படுந்துயரைப் புரிந்து நீ அருள் புரிந்து பாரெல்லாம் வாழவைப்பாய்
ஆரெதும் சொல்லிடினும் அத்தனையும் உன்னடியில் அர்ப்பணித் தமைதி கொள்வேன்
ஆதரவு நீயன்றி ஆருமெனக் கில்லையென அன்றே நான் கண்டுகொண்டேன்
ஊரெதனில் உறைந்தாலும் உள்ளத்தில் என்றுமே உன்னை நான் சிக்கவைத்தேன்
உயர்வான பழமுதிர் சோலைதனில் உறைகின்ற ஒருவனே சக்தி மகனே!