கவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

அறுபடை வீட்டு சஷ்டி கவசங்கள்


முருகனின் அறுபடை வீடுகள் மீது தேவராய சுவாமிகள் பாடியதாக கூறப்படும் கந்த சஷ்டி கவசங்கள் பற்றி முன்னமே பார்த்திருந்தாலும், அனைத்தும் ஒரே புத்தகமாக கிடைக்கவில்லை. இப்பொழுது ஒரே புத்தகமாக கிடைத்திருக்கிறது. இது 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இதைவிட பழைய புத்தகம் கிடைக்காததால், இது நாம் அனைவரும் போற்றும் கவசம் எழுத்திய தேவராயர் எழுதியதுதானா என்பதில் ஐயம் இருந்தாலும். நம்புவோமாக.


தரவிறக்க: அறுபடை வீட்டு சஷ்டி கவசங்கள்

புத்தகத்தின் உரிமை, ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியருக்கே.

சனி, 29 பிப்ரவரி, 2020

சுப்பிரமணியர் கார்த்திகை கவசம்


சென்ற முறை தேடிக்கிடைத்த முருகன் கவசம் போன்றே இந்த முறையும் ஒரு கவசம் கிடைத்துள்ளது. இதன் பெயர் சுப்பிரமணியர் கார்த்திகை கவசம். இதனை சித்த வைத்தியர் ஸ்ரீநிவாஸயோகி என்பவர் இயற்றியுள்ளார். இவர் காஞ்சியில் உள்ள திருநெறிகாரைக்காடென்னும் திருக்காலிமேடாம்பதி பழனியாண்டி சித்தாஸ்ரமத்தில் சித்த வைத்தியராக இருந்துள்ளார்.

இந்த புத்தகத்தில் விநாயகர் அகவலும் உள்ளது.

இணைப்பு: சுப்பிரமணியர் கார்த்திகை கவசம்

வியாழன், 26 செப்டம்பர், 2019

முருகர் கவசம்



கந்தர் சஷ்டி கவசம், கந்த குரு கவசம், ஷண்முக கவசம் வரிசையில் இன்று இணையத்தில் தேடியதில் புதிதாக முருகர் கவசம் என்று ஒன்று கிடைத்தது. இதனை கூடலூர் இருளப்ப செட்டியார் இயற்றியுள்ளார். இதில் சில பகுதிகள் காகித கிழிசலில் இருப்பதால், என்ன வரிகள் என்று முழுமையாக தெரியவில்லை. தற்போது தேடியதுவரை வேறு பதிப்போ அல்லது புத்தகமோ இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை முருகனருளினால் வரும் காலங்களில் பகிர்கிறேன்.

இணைப்பு: முருகர் கவசம்

புதன், 4 செப்டம்பர், 2019

கந்தர் சஷ்டி கவசம் - விளக்கம்

மிகவும் புகழ்பெற்ற பரிச்சியமான ஸ்ரீ தேவராய சுவாமிகள் எழுதிய திருச்செந்தூர் கந்தர் சஷ்டி கவசத்தினுடைய பொருள் பெரும்பாலும் எளிதாக விளங்கினாலும், சில வார்த்தைகளின் பொருள் புரிவதில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது. அதன் பொருட்டு இணையத்தில் தேடியதில் ஒரு புத்தகம் கிடைத்தது. அதன் பெயர் கந்தர் சஷ்டி கவசம் - மூலமும் மெய்ப்பொருள் விளக்க விருத்தி உரையும் ஆசிரியர் திரு. அமிர்தம் சுந்தரநாத பிள்ளை.

இதனை பின்வரும் இணைப்பில் பதிவிறக்கிக்கொள்ளலாம்.


புத்தகத்தின் உரிமை, ஆசிரியர் மற்றும் பதிப்பாசிரியருக்கே.

செவ்வாய், 17 நவம்பர், 2015

கந்த சஷ்டி கவசம் - பழமுதிர்ச்சோலை

காப்பு

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கன்மால் மருமகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழநிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
சரவண பவனே சட்கோணத் துள்ளுரை
அரனருள்சு தனே அய்யனே சரணம்
சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
மயில்வா கனனே வள்ளலே சரணம்

திரிபுர பவனே தேவசே னாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம்
திகழொளி பவனே சேவற் கொடியாய்
நகமா யுதமுடை நாதனே சரணம்
பரிபுர பவனே பன்னிரு கையனே
தருணமிவ் வேளை தற்காத் தருளே
சவ்வும் ரவ்வுமாய் தானே யாகி
வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
தவ்வியே ஆடும் சரவண பவனே

குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்சமென் றுன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங்(கு)
அஞ்சலி செய்வதன் அமுதமும் உண்டு
கார்த்திகை மாதர் கனமார்(பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
தவமுடை வீர வாகுவோ(டு) ஒன்பான்
தம்பி மா ராகக் கொண்ட
சம்பிர தாயா சண்முகா வேலா

நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்
பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்கத்
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை
அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
விமலனும் கேட்டு வேகம தாக
உமையுடன் வந்தினி துவந்து புரிந்து

அயனைச் சிறைவிடென்(று) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
கௌரி லக்ஷ்மி கலைமக ளுடனே
அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல
ஆறு முகத்துடன் அவதரித்தோனே
சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்
பங்கமே செய்யும் பானு கோபனும்
சூரனோ டொத்த துட்டர்க ளோடு
கோரமே செய்யும் கொடியராக் கதரை

வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
ஆறிடச் செய்த வமரர்கள் தமக்குச்
சேனா பதியாய் தெய்வீகப் பட்டமும்
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெருமானே
திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருவே ரகமுதல்
எண்ணிலாத தலங்களில் இருந்தாடும் குகனே
விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே
தஞ்சமென்(று) ஓதினர் சமயம் அறிந்தங்(கு)

இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா
கும்பமா முனிக்குக் குருதே சிகனே
தேன்பொழில் பழநித் தேவ குமாரா
காண்பார்த்(து) எனையாள் கார்த்திகே யாஎன்
கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி
அஷ்டலக்ஷ்மி வாழ் அருளெனக்(கு) உதவி
இட்டமாய் என்முன் னிருந்து விளையாடத்
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே
அருணகிரி தனக்(கு) அருளியதமிழ்போல்
கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்

தேவராயன் செப்பிய கவசம்
பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட
சஷ்டிக் கவசம் தான்செபிப் போரைச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த்திறம் தந்தருள் வோனே
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் தமிழ்தரும் அரனே
சரணம் சரணம் சங்கரன் சுதனே
சரணம் சரணம் சண்முகா சரணம்.

-- ஸ்ரீ தேவராய சுவாமிகள்

திங்கள், 16 நவம்பர், 2015

கந்த சஷ்டி கவசம் - திருத்தணி


காப்பு

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

கணபதி துணைவா கங்காதரன் புதல்வா
குணவதி உமையாள் குமரா குருபரா
வள்ளிதெய் வானை மருவிய நாயகா
துள்ளிமயி லேறும் சுப்பிர மணியா
அழகொளிப் பிரபை அருள்வடி வேலா
பழநி நகரில் பதியநு கூலா
திருவா வினன்குடி சிறக்கும் முருகா
அருள்சேர் சிவகிரி ஆறு முகவா
சண்முக நதியும் சராபன்றி மலையும்
பன்முகம் நிறைந்த பழநிக்கு இறைவா

ஆறாறு நூற்று அட்டமங் களமும்
வீரவை யாபுரி விளங்கும் தயாபரா
ஈராறு பழநி எங்கும் தழைக்கப்
பாராறு சண்முகம் பகரும் முதல்வா
ஆறு சிரமும் ஆறுமுகமும்
ஆறிரு புயமும் ஆறிரு காதும்
வடிவம் சிறந்த மகரகுண் டலமும்
தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்தூரமும்
திருவெண் ணீறணி திருநுதல் அழகும்
கருணை பொழியும் கண்ணான்கு மூன்றும்

குனித்த புருவமும் கூரிய மூக்கும்
கனித்த மதுரித்த கனிவாய் இதழும்
வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்
எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும்
காரிகை உமையாள் களித்தே இனிதெனச்
சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள்
பார்த்தழ கென்னப் பரிந்த கபாலமும்
வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும்
முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க
மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட

ஈச்வரன் பார்வதி எடுத்துமுத் தாடி
ஈச்வரன் வடிவை மிகக்கண் டனுதினம்
கையால் எடுத்துக் கனமார்(பு) அணைத்தே
ஐயா! குமரா! அப்பனே! என்று
மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக்
கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சி
முன்னே கொட்டி முருகா! வருகவென்(று)
அந்நேரம் வட்டமிட் டாடி விளையாடித்
தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக்
கூவிய மயிலேறும் குருபரா வருக

தாவிய தகரேறும் சண்முகா வருக
ஏவியவே லேந்தும் இறைவா வருக
கூவிய சேவற் கொடியோய் வருக
பாவலர்க் கருள்சிவ பாலனே வருக
அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக
பொன்போல் சரவணப் புண்ணியா வருக
அழகிற் சிவனொளி அய்யனே வருக
களபம் அணியுமென் கந்தனே வருக
மருமலர்க் கடம்பணி மார்பா வருக
மருவுவோர் மலரணி மணியே வருக

திரிபுர பவனெனும் தேவே வருக
பரிபுர பவனெனும் பவனே வருக
சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருக
காலில் தண்டை கலீர் கலீரென
சேலிற் சதங்கை சிலம்பு கலீரென
இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும்
அடும்பல வினைகளை அகற்றிய பாதமும்
சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும்
நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும்
தங்கரை ஞாணும் சாதிரை மாமணி

பொங்குமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும்
சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும்
மந்திர வாளும் வங்கிச் சரிகையும்
அருணோ தயம்போல் அவிர்வன் கச்சையும்
ஒருகோடி சூரியன் உதித்த பிரபைபோல்
கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும்
இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும்
ஆயிரம் பணாமணி அணியுமா பரணமும்
வாயிலநன் மொழியாய் வழங்கிய சொல்லும்
நாபிக் கமலமும் நவரோக பந்தியும்

மார்பில் சவ்வாது வாடை குபீரென
புனுகு பரிமளம் பொருந்திய புயமும்
ஒழுகிய சந்தனம் உயர் கஸ்தூரியும்
வலம்புரி சங்கொலி மணியணி மிடறும்
நலம்சேர் உருத்திர அக்க மாலையும்
மாணிக்கம் முத்து மரகதம் நீலம்
அணிவை டூரியம் அணிவைரம் பச்சை
பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும்
நவமணிப் பிரபைபோல் நாற்கோடி சூரியன்
அருணோ தயமெனச் சிவந்த மேனியும்

கருணை பொழியும் கடாட்சவீட் சணமும்
கவசம் தரித்தருள் காரண வடிவும்
நவவீரர் தம்முடன் நற்காட்சி யான
ஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம்
ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம்
ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு
ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு
ஒருகை மேற்குடை ஒருகை தண்டாயுதம்
ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம்
அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப்

பங்கயக் கமலப் பன்னிரு தோளும்
முருக்கம் சிறக்கும் முருகா சரவணை
இருக்கும் குருபரா ஏழைபங் காளா
வானவர் முனிவர் மகிழ்ந்து கொண் டாடத்
தானவர் அடியவர் சகலரும் பணியப்
பத்திர காளி பரிவது செய்யச்
சக்திகள் எல்லாம் தாண்டவ மாட
அஷ்ட பயிரவர் ஆனந்த மாட
துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க
சப்த ரிஷிகள் சாந்தக மென்னச்

சித்தர்கள் நின்று சிவசிவா என்னத்
தும்புரு நாரதர் சூரிய சந்திரர்
கும்பமா முனியும் குளிர்ந்ததா ரகையும்
அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள்
நயமுடன் நின்று நாவால் துதிக்க
அஷ்ட லக்ஷ்மி அம்பிகை பார்வதி
கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த
இடும்பா யுதன்நின் இணையடி பணிய
ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க
தேவ கணங்கள் ஜெயஜெய என்ன

ஏவற் கணங்கள் இந்திரர் போற்ற
கந்தருவர் பாடிக் கவரிகள் வீசிச்
சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக
பூதம் அடிபணிந் தேத்தவே தாளம்
பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட
அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க
குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க
குடையும் சேவலின் கொடியும் சூழ
இடை விடாமல்உன் ஏவலர் போற்றச்
சிவனடி யார்கள் திருப்பாத மேத்த

நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம்
உருத்திர வீணை நாதசுர மேளம்
தித்திமி என்று தேவர்கள் ஆடச்
சங்கீத மேளம் தாளம் துலங்க
மங்கள மாக வைபவம் இலங்க
தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம்
சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க
நந்திகே சுவரன்மீது ஏறிய நயமும்
வந்தனம் செய்ய வானவர் முனிவர்
எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர

ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன்
வீரமயி லேறி வெற்றிவேல் எடுத்துச்
சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச்
சிங்கமுகா சுரன் சிரமது உருளத்
துங்கக் கயமுகன் சூரனும் மாள
அடலற்ற சூலத்தை அறுத்துச் சயித்து
விடவே லாயுதம் வீசிக்கொக் கரித்துத்
தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டி
அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத்
திருப்பரங் குன்றம் சீர்ப்பதி செந்தூர்

திருவாவி னன்குடி திருவே ரகமும்
துய்ய பழநி சுப்பிர மணியன்
மெய்யாய் விளங்கும் விராலி மலைமுதல்
அண்ணா மலையும் அருள்மேவும் கயிலை
கண்ணிய மாவூற்று கழுகுமா மலையும்
முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும்
நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும்
கதிர்காமம் செங்கோடு கதிர்வேங் கடமும்
பதினா லுலகத்திலும் பக்தர் மனத்திலும்
எங்கும் தானவ னாயிருந்(து) அடியார்தம்

பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க
கேட்ட வரமும் கிருபைப் படியே
தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா
நாட்டு சிவயோகம் நாடிய பொருளும்
தாட்டிக மாய்எனக்(கு) அருள்சண் முகனே
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

-- ஸ்ரீ தேவராய சுவாமிகள்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

கந்த சஷ்டி கவசம் - திருப்பரங்குன்றம்

காப்பு

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

திருப்பரங் குன்றுரை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத் துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
வையா புரியில் மகிழ்ந்துவாழ் பவனே
ஒய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
பழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
முழுவுடை முதல்வன் முதலாய் நமோ நமோ


விராலி மலையுறை விமலா நமோ நமோ
நாமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ
சூரசம் கார துரையே நமோ நமோ
வீரவே லேந்தும் வேளே நமோ நமோ
பன்னிரு கரமுடை பரமா நமோ நமோ
கண்களீ ராறுடைக் கந்தா நமோ நமோ
கோழிக் கொடியுடை கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சசச சசச ஓம் ரீம்
வவவ வவவ ஆம் ஹோம்


பபப பபப சாம் சூம்
வவவ வவவ களம் ஓம்
லலி லிலி லுலு நாட்டிய அட்சம்
கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக
பக பக பக பரந்தாமா வருக
வருக வருகவென் வள்ளலே வருக
வருக வருகநிஷ் களங்கனே வருக
தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச்


சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
அல்லும் பகலும் அனுதினம் என்னை
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
வல்லவிடங்கள் வராமல் தடுத்து
நல்ல மனத்துடன் ஞான குருஉனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்து நீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்தி கேயா
நந்தன் மருகா நாரணி சேயே
எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தவனை


தண்ணளி அளிக்கும் சாமி நாதா
சிவகிரி கையிலை திருப்பதி வேளூர்
தவக்கதிர் காமம் சார்திரு வேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு
சன்னதி யாய்வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக்(கு) அன்புடன் தமிழை
செகத்தோர் அறியச் செப்பிய கோவே
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்


நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாய் நின்ற மெய்ப்பொரு ளோனே
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி
பக்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
அத்தன் அரியயன் அம்பிகை லட்சுமி
வாணியுடனே வரையுமாக் கலைகளும்
தானே நானென்று சண்முக மாகத்
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்


பூரணகிருபை புரிபவா போற்றி
பூதலத் துள்ள புண்ணியதீர்த் தங்கள்
ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில்
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்
பண்ணும் நிட்டைகள் பலபல வெல்லாம்
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம்
எள்ளினுள் எண்ணெய்போல் எழிலுடைஉன்னை
அல்லும் பகலும் ஆசா ரத்துடன்
சல்லாப மாய்உனைத் தானுறச் செய்தால்
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி


பல்லா யிரநூல் பகர்ந்தருள் வாயே
செந்தில் நகர்உறை தெய்வானை வள்ளி
சந்ததம் மகிழும் தயாபர குகனே
சரணம் சரணம் சரவண பவஓம்
அரண்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

தேவராய சுவாமிகள்

சனி, 14 நவம்பர், 2015

கந்த சஷ்டி கவசம் - திருச்செந்தூர்

காப்பு

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன்
பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம்பாடக் கிண்கிணியாட
மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருக வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹண பவனார் சடுதியில் வருக

ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் 

பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளியையும்
நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும்
சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக

ஆறுமுகமும் அணிமுடி யாறும்
நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியும் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழுகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நண்மணி பூண்ட நவரத்தின மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செகண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்
றுண்டிரு வடியை உறுதியென் றென்னும்
என்றனை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினை காக்க
விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனை பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை யிரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க
பிட்டமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவ ளிருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா நாடியை முனைவேல் காக்க
எப்பொழுதும் யெனை எதிர்வேல் காக்க

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க
அரையிரு டன்னில் அனையவேல் காக்க
ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியி நோக்க

தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்லபூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைக டின்னும் புழக்கட முனியும்
கொள்ளிவாய் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமரா க்ஷதரும்

அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிலும் எதிர்படு மன்னரும்
கனபூசை கொள்ளும் காளியோடனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பாவைகளும்

பூனை மயிரும் பிள்ளைக ளென்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோரும்
ஓதுமஞ் சணமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கைகால் முறியக்
கட்டுக் கட்டுக் கதறிடக் கட்டு

முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற் செதிலாக
சொக்கு சொக்கு சூர்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்

எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடுத்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைஷயங் குன்மம் சொக்கச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
ஈரே ழலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
சரஹண பவனே சையொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே
அரிதிரு மருக அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

என்னாவிருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினே னாடினேன் பரவசமாக
ஆடினே னாடினேன், ஆவினன் பூதியை
நேசமுடன் யான் நெற்றி யிலணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன் பதம் பெறவே உன்னரு ளாக
அன்புட னிரஷி அன்னமும சொன்னமும்

மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைகுற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்கவென் வறுமைக நீங்க

எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்யினும்
பெற்றவ நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துட னாளும்
ஆசா ரத்துடனே அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகி
கந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய

அஷ்டதிக் குள்ளொர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்   (செயலது அருளுவர்.)
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் 

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லாதவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணிந்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள்ள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி

கடம்பா போற்றி கந்தா போற்றி
வெற்றி புனையும் வேலே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிடுவாய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

- தேவராய சுவாமிகள்

தரவிறக்க : திருச்செந்தூர் கந்தர் சஸ்டி கவசம்

வெள்ளி, 13 நவம்பர், 2015

கந்த சஷ்டி கவசம் - சுவாமிமலை

காப்பு

நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

குறள் வெண்பா
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல்

ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓங்கார மாக உதயத் தெழுந்தே
ஆங்கார மான அரக்கர் குலத்தை
வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா போற்றி பழநியின் கோவே
நான்கு மறைகள் நாடியே தேடும்
மான்மரு கோனே வள்ளி மணாளனே

நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக்
காணநீ வந்து காப்பதும் கடனே
காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் முதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி
ஏகாட் சரமாய் எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதற் பொருளே
துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம்
அதிசய மாக அமைத்தவா போற்றி

திரியட் சரத்தால் சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மையுற் றவனே
சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம்
மதுர மாய் அளிக்கும் மயில்வா கனனே
பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்
ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறுசிரமும் அழகிய முகமும்

ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்
சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள்பன் னிரண்டில் கதிரும் ஆயுதத்தால்
தரங்குலைந்(து) ஓடத் தாரகா சுரன்முதல்
வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய்
சீர்திருச் செந்தூர்த் தேவசே னாதிபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
இஷ்டசித்திகள் அருள் ஈசன், புதல்வா

துஷ்டசங் காரா சுப்பிர மணியா
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொள்ளாக் காட்சி காட்டிய சடாட்சர
சைவம் வைணவம் சமரச மாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்

தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான்
அர்ச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய்
பில்லிவல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச்
சல்லாப மாகக் சகலரும் போற்ற
கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்

சண்டமா முனியும் தக்கராக் கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு
திட்டு முறைகள் தெய்வச் சாபம்
குட்டல் சோம்பல் கொடிய வாந்தியம்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்
உன்னுடைய நாமம் ஓதியே நீறிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை

செய்வதுன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரவே சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!!

-- ஸ்ரீ தேவராய சுவாமிகள்

வியாழன், 12 நவம்பர், 2015

கந்த சஷ்டி கவசம் - பழநி

காப்பு

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

நூல் 

திருவா வினன்குடி சிறக்கும் முருகா
குருபரா குமரா குழந்தைவே லாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா
இரவலர் தயாபரா ஏழைபங் காளா
பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா
இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா
இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன்
பட்சத்துடனே பராசக்தி வேலதாய்

வீர வாகு மிகுதள கர்த்தனாய்
சூரசம் காரா துஷ்டநிஷ் டூரா
கயிலாய மேவும் கனகசிம் மாசனா
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா
அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா
சுகத்திரு முருகாற் றுப்படை சொல்லிய
நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்
கைக்கீழ் வைக்கும் கனகமிசைக் குதவா
திருவரு ணகிரி திருப்புகழ் பாட
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா

ஆயிரத் தெட்டாம் அருள்சிவ தலத்தில்
பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா
எண்ணா யிரம்சமண் எதிர்கழு வேற்றி
விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா
குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து
உருப்பொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்
சுருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒருமுகம்
அருள்பெரு மயில்மீ(து) அமர்ந்தது ஒருமுகம்
வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம்
தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்பது ஒருமுகம்

சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம்
ஆரணம் ஓதும் அருமறை யடியார்
தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம்
ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி
திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம
பொருட்செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம
ஏரகம் தனில்வாழ் இறைவா நமோ நம
கூரகம் ஆவினன் குடியாய் நமோ நம
சர்வசங் கரிக்குத் தனயா நமோ நம
உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோ நம

எல்லாக் கிரிக்கும் இறைவா நமோ நம
சல்லாப மாகச் சண்முகத் துடனே
எல்லாத் தலமும் இனிதெழுந் தருளி
உல்லா சத்துறும் ஓங்கார வடிவே
மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை
சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை
வேலா யுதமுடன் விளங்கிடும் குகனைச்
சீலமார் வயலூர் சேந்தனைத் தேவனை
கைலாச மேருவா காசத்தில் கண்டு
பைலாம் பூமியும் பங்கய பார்வதி

மேலும் பகலும் விண்ணுரு வேத்தி
நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை
கங்கை யீசன் கருதிய நீர்புரை
செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி
வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி
ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல்
ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன்
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை

தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு
மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி
அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி
மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர்
பாகமாய் ரதமும் பகல்வழி யாரை
சாகா வகையும் தன்னை அறிந்து
ஐந்து ஜீவனுடன் ஐயஞ் சுகல்பமும்
விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி
சந்திர சூரியர் தம்முடன் அக்கினி
அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச்

சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை
மந்திர அர்ச்சனை வாசிவ என்று
தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்
ஆறு முகமாய் அகத்துளே நின்று
வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து
யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி
மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு
வாலைக் குழந்தை வடிவையும் காட்டி
நரைதிரை மாற்றி நாலையும் காட்டி
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி

மனத்தில் பிரியா வங்கண மாக
நினைத்த படிஎன் நெஞ்சத் திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி
மதியருள் வேலும் மயிலுடன் வந்து
நானே நீயெனும் லட்சணத் துடனே
தேனே என்னுளம் சிவகிரி எனவே
ஆறா தாரத்(து) ஆறு முகமும்
மாறா திருக்கும் வடிவையும் காட்டிக்
கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க
தனதென வந்து தயவுடன் இரங்கிச்

சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம்
எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து
அஷ்டாவ தானம் அறிந்தவுடன் சொல்லத்
தட்டாத வாக்கு சர்வா பரணமும்
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்
துலக்கிய காவியம் சொற்பிர பந்தம்
எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம்
வழுத்தும் என்நாவில் வந்தினி திருந்தே
அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும்
சமுசார சாரமும் தானேநிசமென

வச்சிர சரீரம் மந்திர வசீகரம்
அட்சரம் யாவும் அடியேனுக் குதவி
வல்லமை யோகம் வசீகர சக்தி
நல்லஉன் பாதமும் நாடிய பொருளும்
சகலகலை ஞானமும் தானெனக் கருளி
செகதல வசீகரம் திருவருள் செய்து
வந்த கலிபிணி வல்வினை மாற்றி
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்
கிட்டவே வந்து கிருபை பாலிக்க
அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய்

துட்டதே வதையும் துட்டப் பிசாசும்
வெட்டுண்ட பேயும் விரிசடைப் பூதமும்
வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க
பேதாளம் துர்க்கை பிடாரி நடுநடுங்க
பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி
உதைத்த மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச்
சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி
வேலா யுதத்தால் வீசிப் பருகி
மழுவிட் டேவி வடவாக் கினிபோல்

தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்
சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்
மதம்பெறும் காளி வல்ல சக்கரம்
மதியணி சம்பு சதாசிவ சக்கரம்
பதிகர்ம வீர பத்திரன் சக்கரம்
திருவை குண்டம் திருமால் சக்கரம்
அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம்
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்

ஏக ரூபமாய் என்முனே நின்று
வாகனத் துடன்என் மனத்துள் இருந்து
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்
இம்பமா கருடணம் மேவுமுச் சாடனம்
வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம்
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடணம்
தந்திர மந்திரம் தருமணி அட்சரம்
உந்தன் விபூதி உடனே சபித்து
கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க
எந்தன் மனத்துள் எதுவேண் டினும்

தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்
சரணம் சரணம் சட்கோண இறைவா
சரணம் சரணம் சத்துரு சம்காரா!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

-- ஸ்ரீ தேவராய சுவாமிகள்

புதன், 11 நவம்பர், 2015

அறுபடைவீடுகளும் கவசங்களும்

முருகனின் புகழ் பாட எத்தனையோ பாடல்கள் இருந்தாலும் கந்தர் சஷ்டி கவசங்களுக்கு தனி இடம் உண்டு. இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர் எப்பொழுது பிறந்தார்,  பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர் என்ற எந்த விவரமும் எனக்கு தெரியவில்லை, இணையத்திலும் தெளிவான விவரங்கள் கிடைக்கவில்லை. கவசங்களில் வரும் மந்திரங்களை வைத்து பார்க்கும்போது இவர் மந்திரங்கள் கற்றவர் என்பது தெளிவாகிறது. எதாவது ஒரு சித்தரின் வழிகாட்டுதலின் பெயரில் இவர் இப்பாடல்களை இயற்றியிருக்கலாம் என்பது என் கருத்து. பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6 அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றியிருக்கிறார், எனினும்  திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியை நோக்க சரவண பவனார்.. என்று தொடங்கும் பாடல்தான் பெரும்பாலும் பாடப்படுகிறது.

இவர் தீராத வயறு வலியால் அவதிபட்டதால், பல மருந்துகள் சாப்பிட்டும் குணமாகாததால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் திருச்செந்தூர் சென்றார். அந்தநேரம் கந்தர் சஷ்டி திருவிழா நடந்துகொண்டிருக்க, விழாமுடியும் வரை முருகனை தரிசித்துவிட்டு பின் செய்துகொள்ளலாம் என முடிவு செய்தார். தமிழிலும் மந்திரத்திலும் புலமை பெற்ற அவர் முருகன் மேல் ஆறு பாடல்களை, ஆறு படைவீடுகளின் மேல் பாடினார். இவர் பாடி முடிக்கவும், விழா முடியவும், இவரது வயிறு வலி பூரணமாக குணமடையவும் சரியாக இருந்தது.

இந்த ஆறு பாடல்களையே நாம் கந்தர் சஷ்டி கவசமாக போற்றுகின்றோம். இனிவரும் நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடலாக பார்ப்போம்.

அறுபடைவீடுகள்
1. திருவாவினன்குடி (பழனி)
2. திருவேரகம் (சுவாமிமலை)
3. திருச்செந்தூர்
4. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)
5. திருப்பரங்குன்றம்
6. பழமுதிர்சோலை

புதன், 30 செப்டம்பர், 2015

கந்தகுரு கவசம்


காப்பு 

கலியுக தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
மூஷிக வாகனனே மூலப் பொருளோனே
ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே
திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய்

சித்தி விநாயக ஜயமருள் போற்றுகிறேன்
சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய்
கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன்
அச்சம் தீர்த்தென்னை ரக்ஷித்திடுவீரே.

நூல் 

ஸ்கந்தா சரணம்; ஸ்கந்தா சரணம்
சரவணபவ குஹா சரணம் சரணம்
குருகுஹா சரணம்; குருபரா சரணம்
சரணமடைந்திட்டேன் கந்தா சரணம்
தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே
ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே
தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர்
அவதூத ஸத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர்

அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே
அறம்  பொருளின்பம் வீடுமே தந்தருள்வாய்
தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுரு நாதா
சண்முகா சரணம் சரணம் ஸ்கந்தகுரோ
காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா
போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா
போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி
போற்றி போற்றி முருகா போற்றி

அறுமுகா போற்றி; அருட்பதம் அருள்வாய்
தகப்பன் சாமியே என் இதயத்துள் தங்கிடுவாய்
ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய்
சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை
அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம்
திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே
ஆறுமுக ஸ்வாமி யுன்னை அருட்ஜோதியாய்க் காண
அகத்துள்ளே குமரா நீ அன்புமயமாய் வருவாய்

அமரத் தன்மையினை அனுக்ரஹித் திடுவாயே
வேலுடைக் குமரா; நீ வித்தையும் தந்தருள்வாய்
வேல்கொண்டு வந்திடுவாய்; காலனை விரட்டிடவே
தேவரைக் காத்த திருச்செந்திலாண்டவனே
திருமுருகன் பூண்டியிலே திவ்யஜோதியான கந்தா
பரஞ்ஜோதியுங் காட்டி பரிபூர்ண மாக்கிடுவாய்
திருமலை முருகா நீ திடஞான மருள்புரிவாய்
செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய்

அடிமுடியறிய வொணா அண்ணா மலையோனே
அருணாசலக் குமரா அருணகிரிக் கருளியவா
திருப்பரங்கிரி குஹனே தீர்த்திடுவாய் வினைமுழுதும்
திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய்
எட்டுக்குடி குமரா ஏவல்பில்லி சூனியத்தை
பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய்
எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே
எங்கும் நிறைந்த கந்தா; எண்கண் முருகா நீ

என்னுள்ளறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய்
திருப்போரூர் மாமுருகா திருவடியே சரணமய்யா
அறிவொளியாய்வந்த நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய்
திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா
ஜகத்குரோ சிவகுமரா சித்தமல மகற்றிடுவாய்
செங்கோட்டு வேலவனே சிவானு பூதிதாரும்
சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய்
குன்றக்குடி குமரா குருகுகனாய் வந்திடப்பா

குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர்
பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா
பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா
விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா
வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே
வெண்ணெய் மலைமுருகா மெய்வீட்டைத் தந்திடுவீர்
கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய்
காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர்

மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர்
கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர்
குமரமலை குருநாதா கவலையெல்லாம் போக்கிடுவீர்
வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர்
வடபழனி யாண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர்
ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர்
ஏழ்மையகற்றி கந்தா எமபயம் போக்கிடுவீர்
அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய்
அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய்

பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு
பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன்
அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே
படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே
உலகெங்கு முள்ளது ஒருபொருள் அன்பேதான்
உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய்
அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன்
அன்பே ஓமெனும் அருள்மந்திரம் என்றாய்

அன்பை உளத்திலே அசையாது அமர்த்திடுமோர்
சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும்
வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ
யாவர்க்கும் இனியன் நீ; யாவர்க்கும் எளியன் நீ
யாவர்க்கும் வலியன் நீ; யாவர்க்கு மானோய் நீ
உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே
சிவசக்திக் குமரா சரணம் சரணமையா
அபாயம் தவிர்த்து தடுத்தாட் கொண்டருள்வாய்

நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும்
பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர்
உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்
யானெனதற்ற மெய்ஞ்ஞானமதருள்வாய் நீ
முக்திக்கு வித்தான முருகா கந்தா
சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா
ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா
ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய்

தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய்
சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய்
பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ
ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ
அடியனைக் காத்திட அருவாய் வந்தருள்வாய்
உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா
தேவாதி தேவா சிவகுரோ வா வா வா
வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா

காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய்
வேதச் சுடரோய் மெய்கண்ட தெய்வமே
மித்தையாம் இவ்வுலகை மித்தையென் றறிந்திடச்செய்
அபயம் அபயம் கந்தா; அபயமென்று அலறுகிறேன்
அமைதியை வேண்டி அறுமுகா வா வாவென்றேன்
உன்துணை வேண்டினேன் உமையவள் குமராகேள்
அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய்
வேண்டிய துன்னருளே அருள்வதுன் கடனேயாம்

உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன்
அட்டமா சித்திகளை அடியனுக் கருளிடப்பா
அஜபை வழியிலே அசையாம லிருத்திவிடு
சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு
சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு
அருள்ஒளிக் காட்சியை அகத்துள்ளே காட்டிவிடு
அறிவை அறிந்திடும் அவ்வருளை நீ தந்துவிடு
அனுக்ரஹித் திடுவாய் ஆதிகுரு நாதாகேள்
ஸ்கந்த குருநாதா; ஸ்கந்த குருநாதா

தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நானென்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச் செய்
அருள்வெளி விட்டிவனை அகலா திருத்திடுவாய்
அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ
சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள
சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய்
சிவானந்தம் தந்தருளி சிவசித்த ராக்கிடுவாய்

சிவனைப் போலென்னைச் செய்திடுவதுன் கடனே
சிவசத் குருநாதா சிவசத் குருநாதா
ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய்
தாளினைப் பிடித்தேன் தந்திடு வரமெனக்கு
திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய்
சத்ரு பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு
கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும்
தென்கிழக்கு திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும்

தென்திசை யிலுமென்னைத் திருவருளால் காப்பாற்றும்
தென்மேற்கிலு மென்னைத் திறல்வேலால் காப்பாற்றும்
மேற்குத் திக்கிலென்னை மால்மருகா ரக்ஷிப்பாய்
வடமேற் கிலுமென்னை மயிலோனே ரக்ஷிப்பாய்
வடக்கிலென்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய்
வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே
பத்துதிக்குத் தோறுமெனை பறந்துவந்து ரக்ஷிப்பாய்
என்சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய்

நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும்
புருவங்களுக் கிடையே புருஷோத்தமன் காக்கட்டும்
கண்க ளிரண்டையும் கந்தவேல் காக்கட்டும்
நாசிக ளிரண்டையும் நல்லவேல் காக்கட்டும்
செவிக ளிரண்டையும் சேவற்கொடி காக்கட்டும்
கன்னங் களிரண்டையும் காங்கேயன் காக்கட்டும்
உதட்டி னையும்தான் உமாசுதன் காக்கட்டும்
நாக்கை நன்முருகன் நயமுடன் காக்கட்டும்

பற்களைக் கந்தன் பலம் கொண்டு காக்கட்டும்
கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும்
தோள்களிரண்டையும் தூயவேல் காக்கட்டும்
கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும்
மார்பையும் வயிற்றையும் வள்ளி மணாளன் காக்கட்டும்
மனத்தை முருகன் கைமாத்தடிதான் காக்கட்டும்
ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத் திருக்கட்டும்
உதரத்தையெல்லாம் உமை மைந்தன் காக்கட்டும்

நாபிகுஹ்யம் லிங்கம் நவையுடைக் குதத்தோடு
இடுப்பை முழங்காலை இணையான கால்களையும்
புறங்கால்விரல்களையும் பொருந்துமுகர் அனைத்தையுமே
உரோமத் துவாரமெல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய்
தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்ஸமென்பு மேதஸையும்
அறுமுகா காத்திடுவீர்; அமரர் தலைவா காத்திடுவீர்
என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாயிருந்தும்
முருகா வெனைக்காக்க வேல்கொண்டு வந்திடுவீர்

பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
ஓம் ஸெளம் சரவணபவ; ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
க்லௌம் ஸெளம் நம: வென்று சேர்த்திடடா நாள்தோறும்
ஓமிருந்து நம: வரை ஒன்றாகச் சேர்த்திடடா
ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி
ஒருமனத்தோடு நீ உருவையும் ஏத்திடடா
முருகனின் மூலமிது முழுமனத்தோ டேத்திட்டால்
மும்மல மகன்றுவிடும் முக்தி உந்தன் கையிலுண்டாம்

முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்லவேண்டாம்
முருகன் இருப்பிடமே முக்தித் தலமாகுமப்பா
ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே
இக்கணமே மூலமந்திரம் ஏத்திவிடு ஏத்திவிடு
மூலமதை ஏத்துவோர்க்குக் கால பயமில்லையடா
காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா
சொன்னபடிச் செய்தால் சுப்பரமண்ய குருநாதன்
தன்னொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான்

ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே
மூலத்தை நீ ஜபித்தே முத்தனு மாகிடடா
அக்ஷர லக்ஷம் இதை அன்புடன் ஜபித்திடு
எண்ணியதெலாம் கிட்டும் எமபயம் அகன்றோடும்
மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும்
பூவுலகில் இணையற்ற பூஜ்யனு மாவாய் நீ
கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா
கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே

ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே
வேதாந்த ரகசியமும் வெளியாகு முன்னுள்ளே
வேத சூக்ஷ்மத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்பரஹ்மண்ய குரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட்பெருஞ் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்
சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான்
நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன்

மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ
வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறி வாகவே நீ
பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா
பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பழம்ஜோதி யானாய் நீ
பிரமனுக் கருளியவா பிரணவப் பொருளோனே
பிறவா வரமருளி பிரம்ம மய மாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கிவிட்டாய்

பழமுதிர்ச் சோலையில் பரஞ்சோதி மயமானாய்
சுவாமி மலையிலே சிவசுவாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே
பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்

எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
கந்தா சரணம் கந்தா சரணம்
சரண மடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே; சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னிலுன்னைக் காண எனக்கு வரமருள்வாய்
சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்

இந்திரிய மடக்கி இருந்து மறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒன்றும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே
சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர்  உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பெல்லாம் நின்னையே நினைத்திடச் செய்திடுவாய்
திருமுருகா வுன்னைத் திடமுற நினைத்திடவே

திருவருள் தந்திடுவாய் திருவருள் தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வை தானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய்
ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள்
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தகுரு நாதாகேள்
மெய்ப்பொருள் காட்டி மேன்மை அடைந்திடச்செய்

வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய்
தாரித்திரியங்களை உன் தடிகொண்டு விரட்டிடுவாய்
துக்கங்களனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய்
பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய்
இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய்
ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய்
அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா
மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய்

கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை
இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ
என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே
அரைக்கணத்தில் நீயும் ஆடிவரு வாயப்பா
வந்தென்னைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ
அன்புத் தெய்வமே ஆறுமுகமானவனே
சுப்ர மண்யனே சோகம் அகற்றிடுவாய்

ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ
ஞான தண்டபாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய்
அகந்தையெலாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய்
அன்புமயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா
அன்பைஎன் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு
அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய்
உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே
உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய்

எல்லையில்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ
அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய்
அன்பே சிவம்; அன்பே சக்தியும்
அன்பே ஹரியும்; அன்பே பிரம்மனும்
அன்பே தேவரும்; அன்பே மனிதரும்
அன்பே நீயும்; அன்பே நானும்
அன்பே சத்தியம்; அன்பே நித்தியம்
அன்பே சாந்தம்; அன்பே ஆனந்தம்

அன்பே மௌனம்; அன்பே மோக்ஷம்
அன்பே பிரம்மமும்; அன்பே அனைத்துமென்றாய்
அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லையென்றாய்
எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா
அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான்
ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்த குருவானான் காண்
மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமந் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்

ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு
எல்லையில்லாத உன் இறை வளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால்
விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே

நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
பிரம மந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியைக் காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா
ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடியராக்கி மெய் வீட்டில் இருத்தி விடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே

கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா
கருவூரார் போற்றும் காங்கேயா ஸ்கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னி மலைக்குமாரா சித்தர்க் கருள்வோனே
சிவவாக்கிய சித்தருளைச் சிவன்மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர்வாழப் பிரதிஷ்டித்தான்
புலிப்பாணி சித்தர்களால் புடைசூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா

கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ள இடம்
ஸ்கந்தகிரி என்பதை நான் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழனிமலை முருகா கேள்
கொங்கு தேசத்திலே குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம் மாநகரத்தில்

கன்னிமார் ஓடையின் மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ்ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே; ஆதிமூலமான குரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே
பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா
பரமானந்தமதில் எனை மறக்கப் பாலிப்பாய்
மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ

சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன்
ஜோதிப் பிழம்பான சுந்தரனே பழனியப்பா
சிவஞானப் பழமான ஸ்கந்தகுரு நாதா
பழம் நீ என்றதினால் பழனிமலையிருந்தாயோ
திருவாவினன்குடியில் திருமுருகனானாயோ
குமரா முருகா குருகுகா வேலவனே
அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை
கலியுக வரதனென்று கலசமுனி உனைப் புகழ்ந்தான்

ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ
ஒழுக்கமோடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய்
போகருக்கு அருள் செய்த புவன சுந்தரனே
தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா
ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே
தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே
ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே
கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ

ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம்
உன்னையன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன்
கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே
கந்தனென்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும்
புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை
திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக
புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள்
நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும்

நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம்
முருகா முருகா வென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்பேன்
அங்கிங்கெனாதபடி எங்குமே முருகனப்பா
முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா
அப்பப்பா முருகனின் அருளே   உலகமப்பா
அருளெல்லாம் முருகன்; அன்பெலாம் முருகன்
தாவர ஜங்கமமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய்

முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு
ஸ்கந்தாஸ்ரமமிருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச்
சரணம் அடைந்தவர்கள் ஸாயுஜ்யம் பெற்றிடுவர்
சத்தியம் சொல்கிறேன் சந்தேகமில்லையப்பா
வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ
சந்தேகமில்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய்
சத்தியமான தெய்வம் ஸ்கந்த குருநாதன்
சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா.
--
சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல
ஸ்கந்தகுருவே சத்தியம்; சத்தியமே ஸ்கந்தகுரு
சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ
சத்தியமாய் ஞானமாய் சதானந்தமாகி விடு
அழிவற்ற பிரம்மமாய் ஆக்கிவிடுவான் முருகன்
திருமுறைகள் திருமறைகள் செப்புவதும் இதுவேதான்
ஸ்கந்தகுரு கவசமதைச் சொந்தமாக்கிக் கொண்டு நீ
பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும்

பிறவிப் பிணியகலும் பிரம்மானந்த முண்டு
இம்மையிலும் மறுமையிலும் இமையோருன்னைப் போற்றிடுவர்
மூவருமே முன்னிற்பர்; யாவருமே பூஜிப்பர்
அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா
சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா
கவலையகன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே
பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே
கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய்

கவசம் ஏத்துவீரேல் கலியை ஜயித்திடலாம்
கலியென்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே
சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ
ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தொன்றி ஏத்துவோர்க்கு
அஷ்ட ஐஸ்வர்யம் தரும்; அந்தமில்லா இன்பம் தரும்
ஆல்போல் தழைத்திடுவன்; அறுகுபோல் வேறோடிடுவன்
வாழையடி வாழையைப் போல் வம்சமதைப் பெற்றிடுவன்
பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன்

சாந்தியும் சௌக்யமும் ஸர்வமங்களமும் பெருகிடுமே
ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திறுத்தி ஏற்றுவீரேல்
கர்வம் காமக்ரோதம் கலிதோஷ மகற்றுவிக்கும்
முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும்
அறம்பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய் கிட்டும்
ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன்
கள்ளமிலா உளத்தோடு கந்தகுரு கவசந்தன்னை
சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப்

பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும்
கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன்
பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல்
திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று
காத்திடுவான் கந்தகுரு; கவலையில்லை நிச்சயமாய்
ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ
கந்தகுரு கவசந்தனை ஓதுவதே தவமெனவே
உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான

இகபர சுகமுண்டாம் என்னாளும் துன்பமில்லை
துன்பம் அகன்றுவிடும் தொந்தரவுகள் நீங்கிவிடும்
இன்பம் பெருகிவிடும்; இஷ்டசித்தி கூடிவிடும்
பிறவிப் பிணியகற்றி ப்ரம்மநிஷ்டையும் தந்து
காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே
கவலையை விட்டு நீ கந்தகுரு கவசமிதை
இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால்
தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள்

போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய்
ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும்
அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும்
ஞான ஸ்கந்தகுரு நானென்று முன்நிற்பன்
உள்ளொளி யாயிருந்து உன்னில் அவனாகிடுவன்
தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி
எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவன்
ஸ்கந்தஜோதியான கந்தன் கந்தகிரியிலிருந்து

தண்டாயுதம் தாங்கித் தருகிறான் காட்சியுமே
கந்தன் புகழ்பாடக் கந்தகிரி வாருமினே
கந்தகிரி வந்துநிதம் கண்டுய்மின் ஜகத்தீரே
கலிதோஷ மகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின்
ஸ்கந்தகுரு கவசபலன் பற்றறுத்துப் பரம் கொடுக்கும்
ஒருதரம் கவசமோதின் உள்ளழுக்குப் போகும்
இருதரம் ஏத்துவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும்

மூன்றுதர மோதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு
நான்குமுறை யோதி தினம் நல்லவரம் பெறுவீரே
ஐந்துமுறை தினமோதி பஞ்சாக்ஷரம் பெற்று
ஆறு முறையோதி ஆறுதலைப் பெற்றிடுவீர்
ஏழுமுறை தினமேத்தின் எல்லாம் வசமாகும்
எட்டுமுறை ஏத்தின் அட்டமா சித்தி கிட்டும்
ஒன்பது தரமோதின் மரண பயமொழியும்
பத்துத்தர மேத்தி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே
--
கன்னிமார் ஓடையில் நீராடி நீறுபூசிக்
கந்தகுரு கவசமோதி கந்தகிரி ஏறிவிட்டால்
முந்தை வினையெல்லாம் கந்தன் அகற்றிடுவான்
நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையும் கைகூடும்
கன்னிமார் ஓடைநீரை கைகளிலே நீ எடுத்துக்
கந்தனென்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி
உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டால் உன்
சித்தமலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும்

கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே
கண்டு வழிபட்டு கந்தகிரியேறிடுவீர்
கந்தகிரியேறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதை
பாராயணம் செய்துலகில் பாக்யமெலாம் பெற்றிடுவீர்.



தரவிறக்க : கந்தகுரு கவசம்

-- கோடிட்ட பகுதிகள் இசை பாடலில் வராது. காரணம் தெரியவில்லை.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

சண்முக கவசம்



(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள(து) ஆகித்
தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி
எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன
திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க

ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க
தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க

இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை
முருகவேள் காக்க, நாப்பல் முழுதும்நல் குமரன் காக்க
துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க
திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க
ஆகஇலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க, எந்தன்
ஏக இலா முழங்கை தன்னை எழில் குறிஞ்சிக்கோன் காக்க

உ றுதியாய் முன்கை தன்னை உ மையிள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என்கைத் தலத்தை மாமுருகன் காக்க
புறம்கையை அயிலோன் காக்க, பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால்மருகன்காக்க, பின்முதுகைச் சேய் காக்க

ஊண்நிறை வயிற்றை மஞ்சை ஊர்த்தியோன் காக்க, வம்புத்
தோள்நிமிர் சுரேசன் உ ந்திச் சுழியினைக் காக்க, குய்ய
நாணினை அங்கி கௌரிநந்தனன் காக்க, பீஜ
ஆணியை கந்தன்காக்க, அறுமுகன் குதத்தைக் காக்க

எஞ்சிடாது இடுப்பை வேலுக்கு இறைவனார் காக்க காக்க
அம்சகனம் ஓர் இரண்டும் அரன்மகன் காக்க காக்க
விஞ்சிடு பொருள் காங்கேயன் விளரடித் தொடையைக் காக்க
செஞ்சரண நேச ஆசான் திமிரு முன் தொடையைக் காக்க

ஏரகத் தேவன்என்தாள் இரு முழங்காலும் காக்க
சீருடைக் கணைக்கால் தன்னைச் சீரலைவாய்த்தே காக்க
நேருடைப் பரடு இரண்டும் நிகழ் பரங்கிரியன் காக்க
சீரிய குதிக்கால் தன்னைத் திருச்சோலை மலையன் காக்க

ஐயுறு மலையன்பாதத்து அமர் பத்து விரலும் காக்க
பையுறு பழநி நாத பரன், அகம் காலைக் காக்க
மெய்யுடன் முழுதும், ஆதி விமல சண்முகவன் காக்க
தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க

ஒலியெழ உ ரத்த சத்தத் தொடுவரு பூத ப்ரேதம்
பலிகொள் இராக்கதப்பேய் பலகணத்து எவை ஆனாலும்
கிலிகொள எனைவேல் காக்க, கெடுபரர் செய்யும் சூன்யம்
வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடாது அயில்வேல் காக்க

ஓங்கிய சீற்றமே கொண்டு உ வணிவில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எஃகம் தடி பரசு ஈட்டி யாதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்,
தீங்கு செய்யாமல் என்னைத் திருக்கைவேல் காக்க காக்க

ஒளவியமுளர் ஊன் உ ண்போர் அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவர் ஆனாலும் திடமுடன் எனைமல் கட்டத்
தவ்வியே வருவா ராயின், சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன் கைஅயில் காக்க காக்க

கடுவிடப் பாந்தன் சிங்கம் கரடி நாய் புலிமா யானை
கொடிய கோணாய் குரங்கு கோல மார்ச்சாலம் சம்பு
நடையுடை எதனா லேனும் நான் இடர்ப் பட்டி டாமல்
சடிதியில் வடிவேல் காக்க சானவிமுளை வேல் காக்க

ஙகரமே போல் தழீஇ ஞானவேல் காக்க, வன்புள்
சிகரிதேள் நண்டுக் காலி செய்யன் ஏறு ஆலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான் நளிவண்டு புலியின் பூச்சி
உ கமிசை இவையால், எற்குஓர் ஊறுஇலாது ஐவேல் காக்க

சலத்தில் உ ய்வன்மீன் ஐறு, தண்டுடைத் திருக்கை, மற்றும்
நிலத்திலும் சலத்திலும் தான் நெடுந்துயர் தரற்கே உ ள்ள
குலத்தினால், நான் வருத்தம் கொண்டிடாது அவ்வவ்வேளை
பலத்துடன் இருந்து காக்க, பாவகி கூர்வேல் காக்க

ஞமலியம் பரியன்கைவேல், நவக்கிரகக்கோள் காக்க
சுமவிழி நோய்கள், தந்த சூலை, ஆக்கிராண ரோகம்,
திமிர்கழல் வாதம், சோகை, சிரமடி கர்ண ரோகம்
எமை அணுகாமலே பன்னிருபுயன் சயவேல் காக்க

டமருகத்து அடிபோல் நைக்கும் தலையிடி, கண்ட மாலை
குமுறு விப்புருதி, குன்மம், குடல்வலி, ஈழை காசம்,
நிமிரொணா(து) இருத்தும்வெட்டை, நீர்பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்று எறிந்தவன் கைவேல் காக்க

இணக்கம் இல்லாத பித்த எரிவு, மாசுரங்கள், கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம், மூலவெண்முளை, தீமந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி சாலம் என்று அறையும் இந்த
பிணிக்குலம் எனை ஆளாமல் பெரும்சக்தி வடிவேல் காக்க

தவனமா ரோகம், வாதம், சயித்தியம், அரோசகம், மெய்
சுவறவே செய்யும் மூலச்சூடு, இளைப்பு, உ டற்று விக்கல்,
அவதிசெய் பேதி சீழ்நோய், அண்டவாதங்கள், சூலை
எவையும் என்னிடத்து எய்தாமல் எம்பிரான் திணிவேல் காக்க

நமைப்புறு கிரந்தி, வீக்கம் நணுகிடு பாண்டு, சோபம்
அமர்த்திடு கருமை வெண்மை ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்குமுன் உ று வலிப்போடு எழுபுடைப்பகந்த (ரா)ஆதி
இமைப்பொழுதேனும் என்னை எய்தாமல் அருள்வேல் காக்க

பல்லது கடித்து மீசை படபடென்றே துடிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சம் காட்டியே உ ருட்டி நோக்கி
எல்லினும் கரிய மேனி எமபடர், வரினும் என்னை
ஒல்லையில் தார காரி ஓம் ஐம் ரீம் வேல் காக்க

மண்ணிலும் மரத்தின்மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்
தண்ணிறை ஜலத்தின் மீதும்சாரி செய் ஊர்தி மீதும்
விண்ணிலும் பிலத்தின் உ ள்ளும் வேறு எந்த இடத்தும் என்னை
நண்ணிவந்து அருள் ஆர்சஷ்டி நாதன் வேல் காக்க காக்க

யகரமேபோல் சூல் ஏந்தும் நறும்புயன் வேல்முன் காக்க
அகரமே முதலாம் ஈராறு அம்பகன் வேல்பின் காக்க
சகரமோடு ஆறும் ஆனோன் தன்கைவேல் நடுவில் காக்க
சிகரமின் தேவ மோலி திகழ் ஐவேல் கீழ்மேல் காக்க

ரஞ்சித மொழி தேவானை நாயகன் வள்ளி பங்கன்
செஞ்சய வேல் கிழக்கில் திறமுடன் காக்க, அங்கி
விஞ்சிடு திசையின் ஞான வீரன் வேல் காக்க, தெற்கில்
எஞ்சிடாக் கதிர்கா மத்தோன் இகலுடைக் கரவேல் காக்க

லகரமே போல் காளிங்கன்நல்லுடல் நெளிய நின்று
தகர மர்த்தனமே செய்த சங்கரி மருகன் கைவேல்,
நிகழ்எனை நிருதி திக்கில் நிலைபெறக் காக்க, மேற்கில்
இகல் அயில்காக்க, வாயுவினில் குகன் கதிர்வேல் காக்க

வடதிசை தன்னில் ஈசன்மகன்அருள் திருவேல் காக்க
விடையுடை ஈசன் திக்கில் வேத போதகன் வேல் காக்க
நடக்கையில் இருக்கும்ஞான்றும் நவில்கையில் நிமிர்கையில், கீழ்க்
கிடக்கையில் தூங்குஞான்றும் கிரிதுளைத்துள வேல்காக்க

இழந்துபோகாத வாழ்வை ஈயும் முத்தையனார் கைவேல்,
வழங்கும் நல் ஊண் உ ண்போதும் மால்விளையாட்டின் போதும்
பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்து நெஞ்சு அடக்கும் போதும்
செழும்குணத்தோடே காக்க, திடமுடன் மயிலும் காக்க

இளமையில் வாலிபத்தில் ஏறிடு வயோதிகத்தில்
வளர் அறுமுகச் சிவன்தான் வந்தெனைக் காக்க காக்க
ஒளிஎழு காலை, முன்எல் ஓம் சிவ சாமி காக்க
தெளிநடு பிற்பகல் கால், சிவகுரு நாதன் காக்க

இறகுடைக்கோழித் தோகைக்கு இறைமுன் இராவில் காக்க
திறலுடைச் சூர்ப்கைத்தே, திகழ்பின் இராவில் காக்க
நறவுசேர் தாள் சிலம்பன் நடுநிசி தன்னில் காக்க
மறைதொழு குழகன் எம்கோன் மாறாது காக்க காக்க

இனம்எனத் தொண்டரோடும் இணக்கிடும் செட்டி காக்க
தனிமையில் கூட்டந் தன்னில் சரவண பவனார் காக்க
நனி அநுபூதி சொன்ன நாதர்கோன் காக்க இத்தைக்
கனிவோடு சொன்ன தாசன் கடவுள்தான் காக்கவந்தே

-- பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

தரவிறக்க : சண்முக கவசம்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

விநாயகர் கவசம்

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு
விநாயகர் காக்க வாய்ந்த சென்னி
அளவுபடா அதிகசவுந் தரதேக
மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க
விளரறநெற் றியை என்றும்விளங்கிய
காசிபர் காக்க புருவந்தம்மைத்
தளர்வில் மகோதரர்காக்க
தடவிழிகள் பாலசந் திரனார் காக்க.

கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங்கணக் கிரீடர் காக்க
நவில்சிபுகம் கிரிசைசுதர் காக்க
நனிவாக்கைவிநா யகர்தாம் காக்க
அவிர்நகை மின் முகர் காக்க
அள் எழிற் செஞ் செவிபாச பாணி பாக்க
தவிர்தலுறா திளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்தி தார்த்தர் காக்க.

காமருபூ முகந்தன்மைக் குணேசர்
நனி காக்க களக் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த
பூர்வசர் தாம்மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகட்டினைத் துலங்கே ரம்பர் காக்க

பக்கம் இரண்டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும்
விக்கினகரன் காக்க விளங்கிலிங்கம்
வியாளபூ டணர்தாம் காக்க
தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர் காக்க
சகலத்தை அல்லல் உக்கண பன் காக்க
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க

தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம்ஏக தந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்கு வார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல்பதும அத்தர் காக்க
சேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க

அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர்தென் திசை காக்க
மிக்கநிரு தியிற்கணே சுரர் காக்க
விக்கின வர்த்தனர் மேற்
கென்னுந் திக்கதனிற் காக்க
வாயுவிற் கசகர் ணன்காக்க
திகழ்உதீசி தக்கநிதி பன்காக்க
வடகிழக்கில் ஈசநந் தனரே காக்க

ஏகதந்தர் பகல்முழுதும் காக்க
இர வினும்சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் விக் கினகிருது காக்க
இராக் கதர்பூதம் உருவேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திரத்தால்
வருந்துயரும் முடிவிலாத
வேகமுறு பிணிபலவும்விலக்குபு
பாசாங்குசர்தாம் விரைந்துகாக்க

மதிஞானம் தவந்தானம்மானம் ஒளி
புகழ்குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம்தானியம் கிரகம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வா யுதர்காக்க
காமர்பவுத் திரர் முன் னான
விதியாரும் கற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க

வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரி யாதியெல்லாம் விகடர் காக்க
என்றிவ்வா றிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூ றொன்றும்
ஒன்றுறா முனிவரவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங்கவர்தேகம் பிணியற வச்
சிரதேக மாகி மன்னும்

- காசிப முனிவர்